Monday, June 19, 2006

வாழ்க்கையில் ஒருமுறையாவது...

சில ஆங்கில இணையதளங்களில், வாழ்க்கையில் ஒருமுறையாவது செய்துவிட வேண்டுமென பலர் நினைப்பதை தொகுத்து வெளியிட்டிருப்பது, ஆர்வமூட்டக்கூடியதாக இருந்தது. அதில் எனக்கு பிடித்தவற்றை தமிழில் தொகுத்திருக்கிறேன்.


விளையாட்டு விழாக்களுக்குச் செல்லுங்கள்

உங்களுக்கு விளையாட்டுக்களில் பெரிதான ஆர்வம் ஏதுமில்லாதிருக்கலாம். ஆனாலும், பார்வையாளர்களின் கூச்சல், அங்கு உள்ள பரவசம், விளையாட்டு வீரர்களின் வெற்றி கொள்ள விழையும் வெறி, இவை அனைத்தும் உங்களை இருக்கையின் நுனிக்கே கொண்டுவரும். ஒரு உலகக்கோப்பை அல்லது ஒலிம்பிக்ஸின் பார்வையாளர்களாக இருந்திருந்தீர்களேயென்றால், அந்த நிகழ்ச்சிகளை உங்கள் வாழ்க்கையில் எப்போழுதுமே மறக்க மாட்டீர்கள். அல்லது குறைந்த பட்சம் உள்ளூர் கிரிக்கெட் மேட்ச் அல்லது வாலிபால் மேட்சாவது நேரில் பாருங்கள்.


சுற்றத்தோடு சில சமயங்கள்

உங்கள் வீட்டைவிட்டு வெளியே வந்து, தெருவை நோக்குங்கள். உங்கள் சுற்றத்தாரில் எத்தனை பேர் உங்களுக்கு அறிமுகம்? வெளியில் பார்த்துக்கொண்டால், ஒரு சிறு புன்னகை. இவ்வளவுதான் பலரோடு உங்கள் அறிமுகம். அவர்களுடம் 20 வருடங்களாக வசித்துக்கொண்டிருக்கிறீர்கள். ஏன் ஒரு விடுமுறை நாளில் அவர்களை உங்கள் வீட்டில் காபி அருந்த அழைக்கக்கூடாது. பக்கத்து வீடுகளுடன் நெருக்கத்தை வளர்த்துக்கொள்வது ஒரு ஆரோக்கியமான விசயம்.


ஏதாவது ஒரு தாவரத்தை வளருங்கள்

அது தக்காளியோ அல்லது தேக்கு மரமோ, ஒரு தாவரத்தை வளர்த்து அது வளருவதை கவனியுங்கள். நீங்கள் வளர்க்கும் தாவரத்தைப் பொருத்து உங்களுக்கு கனி கூட கிடைக்கலாம்.



பாலய சிநேகிதர்களை கண்டுபிடியுங்கள்.

நாம் பள்ளியில் படித்து முடிக்கும் காலகட்டங்களில், எப்போது பள்ளிவாழ்க்கை முடிந்து கல்லூரிக்குச் செல்வோமென எதிர்பார்த்துக்கொண்டேயிருந்திருப்போம். பள்ளி வாழ்க்கை முடியும்போது, குறைந்தபட்சம் பள்ளி நண்பர்களின் நட்பு தொடர வேண்டுமென விரும்பியிருப்போம். ஆனால் புதிய நண்பர்கள் வருகை, இடமாறுதல், நேரமின்மை போன்ற பல காரணங்களால் அவர்களைப் பிரிந்திருப்போம். அவர்கள் என்னவானார்கள், எங்கே உள்ளனர் என்பதை கண்டுபிடித்து பால்ய கால நினைவுகளை பகிரலாம்.


புல்வெளியில் படுத்துக்கொள்ளுங்கள்

செய்வதற்கு எளிமையான ஒன்று. இது வாழ்க்கையின் சிறு விசயங்களில் உள்ள அழகைக்காண்பதற்கும், அதன் மேன்மையை உணர்வதற்கும்தான். அன்றாடம் நாம் கடக்கும் பகுதிகளில் உள்ள எளிமையான இயற்கையழகுகளைக்கூட நாம் கவனித்திருக்க மாட்டோம். இன்று அவைகளை நெருக்கமாக சென்று வானத்தின் பின்னனியோடு ரசியுங்கள். அவசரப்படாமல் நிதானமாக ரசியுங்கள்.



கலைஞன் ஆகலாம்

உங்களில் ஒளிந்திருக்கும் கலைத்திறமையைக் கண்டுபிடியுங்கள். அதற்கான நேரத்தை ஒதுக்குவதுதான் கடினம். பொதுவாக, நமக்கு இதுவெல்லாம் வராது என சிலர் ஒதுங்கிவிடுவார்கள். நீங்கள் ஒரு கதை எழுத உட்காராமலோ, தூரிகையைத்தொடாமலோ இருக்கும்வரை, அதுதான் உங்களின் தனித்திறமை என்பது கூட தெரியாமல் போய்விடும். கவிதையோ, ஓவியமோ, சிற்பமோ எதுவென உணருங்கள். ஏற்கனவே கண்டுபிடித்திருந்தீர்களென்றால் அதற்கென ஒதுக்க நேரத்தைக் கண்டுபிடியுங்கள்.



மழை

அடுத்தமுறை மழை பெய்யும்போது, அனிச்சையாக ஒடி ஒளியாமல், மழையின்போது உலகம் எவ்வளவு அழகாக இருக்கிறது என்பதை ரசியுங்கள். காற்றில் புத்துணர்ச்சியை நுகருங்கள். இதுவரை நடந்திராத தெருக்களிலும், பூங்காக்களிலும் நனைந்த மலர்களை ரசியுங்கள்.(ஊட்டியோ, கொடைக்கானலையோ கற்பனை செய்து கொண்டு படியுங்கள், கோயம்பேடை நினைத்துக்கொண்டால் நான் பொறுப்பல்ல!!!)



நட்சத்திரங்களுக்கு கீழே தூங்குங்கள்

நகரவாசிகள் பெரும்பாலானோருக்கு இது வாய்த்திருக்காது. இரவில் நட்சத்திரங்களை நோக்கிக்கொண்டு வெட்ட வெளியில் படுத்துக்கொள்ளுங்கள். அதன் தூரத்தை கற்பனை செய்து பாருங்கள், நேரத்தையும் விண்வெளியையும் உணர்ந்து பாருங்கள். வாய்ப்பிருக்குமானல், வெட்டவெளியில் அமைந்த கூடாரத்தில், தலையை மட்டும் வெளியே வைத்து படுத்துக்கொள்ளுங்கள்.



சமைத்துப் பாருங்கள்

நீங்கள் மிகச்சிறப்பாக சமைப்பவராக இல்லாதிருக்கலாம். ஆனால் ஏராளமான புத்தகங்கள் உள்ளன. சில அடிப்படைகளைத்தெரிந்திருந்தால் போதுமானது. உணவு உங்கள் கண் முன்னே உருவாவதை பார்ப்பது சுவாரசியமானது. பசியைத்தூண்டும் வாசனையை நுகரும்போது, உங்கள் கைவண்ணத்தினை நீங்களே மெச்சிக்கொள்ளலாம்.


நண்பர்களோடு உங்களை மறந்திருங்கள்

கொஞ்சம் நண்பர்கள், நிறைய மது. இரவு முழுவதும் நீடிக்கும் அரட்டைகள். உங்கள் வாழ்க்கையின் சுமைகளில் இருந்து கொஞ்ச நேரம் விலகியிருக்கலாம். உங்கள் எல்லைகளை நீங்கள் உணர்ந்திருக்கும் வரை, நட்பை கொண்டாடுவதில் களித்திருக்கலாம்.

Friday, June 16, 2006

தமிழை வளர்க்கிறோமா?

தமிழை வளர்க்கிறோம் என்று ஆளாளுக்கு ஏதேதோ செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஏன் ஒருவரும் தமிழை செறிவூட்ட முனைவதில்லை? அதாவது புதிய தேவையான எழுத்துக்களைச் சேர்ப்பது. இலக்கண விதிகளை சரி செய்வது போன்றவைகள்.

நம் முன்னோர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கியது என்பதால் எல்லாம் சரியாக இருக்கும் என்று கண்மூடிக்கொண்டு நம்ப வேண்டுமா? ஒரு இலட்சிய மொழியின் எழுதுவடிவம் என்பது, எல்லாவிதமான ஒலிகளையும் பதிப்பதற்குறிய வசதிகளைக் கொண்டிருக்க வேண்டும். மற்ற மொழிகளை ஒப்பிடும்போது, தழிழில் அவ்வாறு வசதி குறைவுதான்.

உதாரணமாக பெரும்ப்பாலும் அனைத்து மொழிகளிலும் உபயோகிக்கும், ஜ், ஹ், ஷ் போன்ற எழுத்துக்கள் இன்னும் தமிழில் சேர்க்கப்படவில்லை. இன்னும் அவற்றை வடமொழி எழுத்துக்கள் என்று சொல்லியே உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறோம். அவற்றையும் தமிழில் சேர்த்துக்கொள்ளலாமே. ஏற்கனவே வடமொழி எழுத்துக்களை, அதன் உருவத்தை மாற்றித்தான் உபயோகித்துக்கொண்டிருக்கிறோம்.

மேலும் ஆங்கிலமொழியின் சில உச்சரிப்புகளைக்கூட தமிழில் சரியாக எழுதமுடியாது. உதாரணமாக CAT (பூனை) என்ற உச்சரிப்பை தமிழில் எழுத முடியாது. 'கேட்' என்றுதான் எழுத வேண்டும். 'ABRAHAM' என்ற பெயரை தமிழில் ஆபிரகாம் என்றுதான் எழுதமுடியும். அதாவது ஒரு வெளிநாட்டவரின் பெயரை அவர் மொழியில் உள்ள உச்சரிப்பில் எழுதிவைக்க முடியாது. அதற்காக ஏதாவது புது எழுத்துக்களை அறிமுகப்படுத்த முனையலாம். உதாரணமாக CAT - க-அட் ABRAHAM- அ-அப்ரஹ-அம்(இது ஒரு உதாரணம்தான், நாம் முயன்றால் மிகச்சிறந்த முறையில் இதற்கு தீர்வு காணலாம்.)


இப்பதிவின் எனது நோக்கம் என்னவென்றால், நாம் உபயோகிக்கும் வீடு, உடைகள், பொருட்கள் என அனைத்தையும் மேம்படுத்திக்கொண்டே செல்கிறோம், ஆனால் நாம் உபயோகிக்கும் மொழியை மட்டும் கண்டுகொள்ளவே மாட்டேனென்கிறோம். இதற்கு காரணம் என்னவாக இருக்குமென்றால், நம் வசதிக்காக உருவாக்கப்பட்ட மொழியை, தெய்வத்திற்கு இணையாக வைத்ததுதான்.

நமக்காகதான் மொழியேயன்றி, மொழிக்காக நாம் அல்ல! மொழி சுயம்புவாக தோன்றியதல்ல. நாம்தான் உருவாக்கினோம், நாம்தான் அதை செறிவூட்ட வேண்டும். அல்லாவிடில் காலவோட்டத்திற்கு ஈடுகொடுக்கா முடியாமல் அழிந்துவிடும். பெரியார் பல எழுத்து சீர்திருத்தங்களைச் செய்தார். அதே போல இப்பொதும் எப்படி தமிழை மேம்படுத்தலாம், ஆங்கிலத்தை விட எப்படி எளிமைப்படுத்லாம் என்பதைப்பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டும். அதை விடுத்து 'தமிழைப்பழித்தவனை தாய் தடுத்தாலும் விடேன்' என்று முழங்குவது வெறும் உணர்ச்சிகளைத்தூண்டவே பயன்படும்.

Note: At 2010 Nov 20, while reading this after some years, I can see all of my thoughts regarding tamil are changed now :).