Wednesday, March 14, 2007

வட்டி வாங்குவது/கொடுப்பது தவறா?

நான் ஒரு இஸ்லாமிய நண்பருடன் வீடு வாங்குவது பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது நண்பர் தன்னால் இப்போதைக்கு வீடு வாங்க முடியாது, ஏனென்றால் வங்கியில் வீட்டுக்கடன் வாங்குவது தவறு என்றும், அப்படி கடன் வாங்கி வட்டி கட்டுவது இஸ்லாமுக்கு எதிரானது என்றும் கூறினார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

அவர் எனக்கு இஸ்லாமின் படி வட்டி கொடுப்பதோ வாங்குவதோ தவறு என்று விளக்கினார்.

வாடகை சைக்கிள் எடுக்கிறோம். பின்பு சைக்கிளை திருப்பிக்கொடுத்து விட்டு அதற்கான வாடகையும் கொடுக்கிறோம். வீடு வாடகைக்கு விடுகிறோம். தங்குபவர் குறிப்பிட்ட காலம் தங்கியபின்னே அவர் நம் வீட்டை நம்மிடம் ஒப்படைத்து விடுவார். மாதாமாதம் வாடகையும் வாங்கிக்கொள்ளுகிறோம். இது போன்று பொருட்களை வாடகைக்கு விடுவதற்கும், பணத்தை வாடகைக்கு விடுவதற்கும் என்ன வித்தியாசம்?

பொருட்களுக்கு அதிக வாடகை எப்படி தவறோ, அப்படியே பணத்திற்கு அதிக வட்டி வாங்குவதும் தவறுதான். ஆனால் பணத்தை வட்டிக்குக்கொடுப்பதே தவறு என்று எப்படி கூற முடியும்.

இந்த விளக்கங்களை என் நண்பரிடமும் கூறினேன். அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் கூறினார், "உங்கள் வாதத்திற்கு எப்படி மறுப்பு கூறுவது என்று வேண்டுமானால் எனக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் வட்டி கொடுப்பது தவறுதான். பெரியவர்கள் கூறிச்சென்றால் அது தவறாக இருக்காது". மேலும் அவர் தன் மதம் கூறியிருப்பதால் வட்டி தவறாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையில் உறுதியாக இருந்தார். வட்டி தவறென்று கூறிச்சென்றவர்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது, எனவே இதைப்பற்றி ஆராய்ந்து நேரத்தை வீணாக்க விரும்பவிலை என்றும் கூறினார்.

பணம் என்பதை தவறாக புரிந்து கொள்வதுதான் வட்டி தவறென்று கூறுவதற்கும் நம்புவதற்கும் காரணம் என்று நினைக்கிறேன். பணத்தை கடனுக்குக்கொடுத்து (வாடகைக்கு) வட்டி வாங்குவது தவறென்றால், ஷேர் மார்க்கெட்டே இருக்க முடியாது. ஒரு பொருளை வாடகை/கடனுக்குக்கொடுத்து வாடகைப்பணமோ/வட்டிப்பணமோ வாங்குவது தவறென்பது ஒரு தவறான புரிதல் என்றுதான் நினைக்கிறேன்.