Monday, December 18, 2006

தமிழ் தொழில் நுட்பத்திற்கான மொழியா?

தமிழ் தொழில் நுட்பத்திற்கான மொழியா என்பதில் எனக்கு சந்தேகம் உள்ளது. ரேம்(RAM) என்பதை நினைவகம் என்று தமிழில் படித்தால் எளிதில் புரியும் என்று மா சிவகுமார் வலைபதிவில் எழுதியிருக்கிறார். RAM-ஐ விட "நினைவகத்தில்" புரிதல் குறைவுதான் என்பது என் கருத்து.

ஆங்கிலத்தில் ரேம் என்பது (RAM - Random Access Memory). அதாவது ரேண்டம்(Random) என்றால் நேரடியாக எதையும் எடுக்கலாம். வரிசையாக போய் தேடிக்கொண்டிருக்க வேண்டாம். ரேம் என்பது அப்படித்தான். Sequencial Access என்பது Hard Disk, Floppy Disk போன்றவற்றில் இருக்கிறது. ஆனால் RAM மெமரியில் அப்படியல்ல, Hard Disk போல Reading Head-ஐ ஒவ்வொரு இடமாக நகர்த்தி தேட வேண்டாம். தரவை(Data) நேரடியாக எடுத்துக்கொள்ளலாம்.

எனவேதான் அந்த மெமெரியை ரேம்(RAM) என்று அழைக்கிறார்கள். ஆங்கிலத்தில் இப்படி அப்ரிவியேஷனாக (Abbreviation) ஆக பெயரிடுவதில் இவ்வளவு அர்த்தம் பொதிந்த சொற்களை அமைக்க முடிகிறது. இதை நினைவகம் என்று தமிழ்படுத்தியது அறைகுறையானதுதான். வேறு வழியில்லை தமிழில் அப்ரிவியேஷன் டெக்னிக் ஒர்க் அவுட் ஆகுமா?

Train-ஐ ரயில் என்றும் தமிழ்ப் படுத்தலாம், தொடர் வண்டி என்றும் தமிழ்ப் படுத்தலாம். தொடர் வண்டியில் புரிதல் அதிகம் என்று சொல்கிறார்கள். ஆனால் உச்சரிப்பதது கடினமாயிற்றே.

உச்சரிக்க
ரயில் - 3 மாத்திரைகள்
தொடர் வண்டி - 4 மாத்திரைகள் கால அளவு எடுத்துக்கொள்ளும். எளிய சொற்களையே பெரும்பாலோனோர் விரும்புவார்கள்.

பொருள் வெளிப்பட வேண்டும் என்று எப்போதுமே இப்படியான சொற்களை அமைத்துக்கொண்டிருந்தால் தமிழ் எப்படி சொல் வளம் பெறும். ஒரே செயலையோ பொருளையோ குறிக்க ஆங்கிலத்தில் ஏகப்பட்ட சொற்கள் உண்டு. தமிழில் ஒரே சொல்லில் ஏகப்பட்ட பொருள் கொள்கிறோம்.

தமிழை காலங்காலமாக கவிதை எழுத மட்டுமே உபயோகித்து வந்துள்ளனர். இலக்கணம் யாப்பு அது இதுவென்று வாக்கியங்கள் அமைக்க ஏகப்பட்ட கட்டுப்பாடு. அதாவது இவ்வளவு இலக்கணங்களையும் விதிகளையும் கற்றி தேறினால்தான் செய்யுள் இயற்றலாம். இந்த விதிகளை மீறாமல் வார்த்தைகளில் விளையாடி செய்யுள் இயற்றி விளையாடத்தான் தமிழை பண்டைய காலத்தில் பயன்படுத்தியுள்ளனர். 'ர' வில் சொல் ஆரம்பிக்கக்கூடாது, 'ன' வில் ஆரம்பிக்ககூடாது என்று கட்டுப்பாடுகள்.

அண்டைய சமூகத்தாரின் பெயரைக்கூட தமிழில் எழுத முடியாவிட்டால் அது பெருமையா, தமிழில் குறையா?

தமிழை வளப்படுத்தாமல், தமிழில் தொழில் நுட்பச்சொற்களை அமைக்க முடியுமா?

'ர' 'ன' வில் சொற்கள் ஆரம்பிக்கக்க்டாது என்ற கட்டுப்பாடுகள் இனியும் தேவையா? ஜ, ஸ, ஹ போன்ற எழுத்துக்கள் தமிழுக்கு தேவை இல்லையா? அவற்றிற்கு இணையான எழுத்துக்களை சட்டப்பூர்வமாக சேர்க்க வேண்டாமா!!!

Note on 2010: சில வருடங்களுக்குப்பின், இப்போது இப்பதிவைப் படிக்கும்போது, மா சிவகுமார் மற்றும் ஓகையின் கருத்துக்களோடு முழுவதும் ஒத்துப்போகிறேன். மொழியைப்பற்றிய புரிதல் அதிகமாகியிருப்பதுதான் காரணம். :)

3 comments:

மா சிவகுமார் said...

ரியோ,

தமிழை இலக்கியத்துக்கும் யாப்புக்கும் மட்டும்தான் உதவும் என்று ஒதுக்கி வைத்தது நமது குற்றம்.

நினைவகம் என்று மொழிபெயர்த்தால் ஆங்கிலத்தில் இருக்கும் புரிதல் இல்லாமல் போகலாம். உங்களைப் போன்று தொழில் நுட்பமும் தெரிந்து ஆங்கில அறிவும் நிறைந்த குறைந்த எண்ணிக்கையிலான தமிழர் இத்தகைய சொற்களுக்குப் பொருள் விளங்கும் வண்ணம், உச்சரிக்க எளிதாக சொல்லாக்கம் செய்து கொடுத்தால் பள்ளியில் படிக்கும் ஆங்கிலமே படித்தறியா (ஆனால் மற்ற வகையில் உலக அனுபவங்கள் நிறைந்த) தமிழகத்துக் கிராமத்துச் சிறார்களுக்கும் புரிதல் அதிகமாகி அவர்கள் ஆங்கிலத்திலிருந்து கடன் வாங்கிக் கொண்டே இருக்கும் நிலை மாறி எதிர்காலத்திலாவது தமிழில் அறிவுச் செல்வங்களை, தொழில் நுட்பங்களை பெருக்க வழி பிறக்கும்.

"மரபணு மாற்றப்பட்ட விதைகளை வாங்கிப் பயிரிடும் விவசாயிகள் அடுத்த பருவத்துக்கு விளைந்த பயிரிலிருந்து விதை எடுத்துக் கொள்ள முடியாது. திரும்பவும், அதே விதை நிறுவனத்துக்குக் காசு கொடுத்து வாங்கித்தான் விதைக்க முடியும்.

'பேருந்து என்று சொன்னால் என்ன தமிழ் வளர்ந்து விடும், பஸ் என்றாலே எல்லோருக்கும் புரிகிறதே, எதுக்கு செயற்கையாக பேச வேண்டும்'

'பஸ் என்ற சொல்லில் நமக்குப் புரிவது ஏறிப் போகக் கூடிய ஒரு பொருள். அதற்கு மேல் எதுவும் கிடைத்து விடாது. பேருந்து என்று சொல்லும் போது, ஒவ்வொரு முறை வெவ்வேறு வாக்கியங்களில் பயன்படுத்தும் போது, பெரிய, உந்துதல் என்ற இரண்டு சொற்களும் நமக்குப் பழக்கமான, நம்முள் ஊறிய சொற்களுடன் உறவாடும். அப்படி ஆயிரக் கணக்கானோர் பயன்படுத்தும் போது ஒரு மாணவனுக்கோ, ஓட்டுனருக்கோ, பொறியாளருக்கோ, தமது அறிவுடனான சொல்லுடன் இந்த பெரிய உந்துதல் இணைந்து புதிய அறிவு பிறக்கும். பஸ் என்பது மலட்டு விதை போல ஒரு முறை மட்டும் விளையும். பேருந்து என்பது பல்கிப் பெருகும்.'

'கடிச்சது கூவத்துக் கொசு, கடிபட்டது குப்பன்/சுப்பன், மருந்து கொடுப்பது அறிவழகன், ஏன் நோய்க்குப் பெயர் சிக்குன்குன்யா? முட்டு மொறிச்சான் காய்ச்சல் என்று பெயர் இருக்கிறதாம். அதைப் பயன்படுத்தினால் காய்ச்சல் அதிகமாகி விடுமா என்ன?'

'ஆழிப் பேரலை என்பதை ஒதுக்கி விட்டு, சுனாமி என்று பல நாட்களாக முயன்று பரவலாக்கினோம். அங்கு பெருசும் இல்லை, அலையும் இல்லை, ஆழியும் இல்லை. ஆழத்திலிருந்து வந்த பெரிய அலை என்று பள்ளிக் கூட மாணவனும் சொல்லிப் பார்த்துப் புரிந்து கொள்ளக் கூடிய சொல்லைத் தொலைத்து விட்டு, சுனாமி என்று கடன் வாங்கி விதைத்திருக்கிறோம்.'

நாம் எப்படி வளர்வோம்? அடுத்த கண்டுபிடிப்புக்கு, அடுத்த முன்னேற்றத்துக்கு பஸ், சிக்குன்குன்யா, சுனாமி என்று பொருள்பொதிந்த பெயர் பயன்படுத்தும் சமூகங்களின் கை நோக்கி நிற்க வேண்டியதுதான்.

பள்ளியில் படிக்கும் போது தமிழ்வழிக் கல்வியில் சவ்வூடு பரவல் என்று படிப்போம். நூற்றுக் கணக்கான முறை வகுப்பறையில் ஆசிரியர் அதைச் சொல்லும் போது, வரையறைகளைப் படிக்கும் போது, செய்முறைகளைத் தெரிந்து கொள்ளும் போது ஒரு சவ்வு, அதன் ஊடே பரவுதல் மாணவனின் மனத் திரையில் ஓட வாய்ப்புகள் உண்டு. நூறு மாணவர்கள் படித்தால் எண்பது பேருக்கு அந்தப் புரிதல் கிடைத்து விடும்.

ஆஸ்மாஸில் என்று ஆங்கிலத்தில் படித்தால் அதன் பொருளைப் புரிந்து கொள்ள சவ்வையும், ஊடே பரவுதலையும் உணர்ந்து கொள்ள நீளமான வாக்கியங்களைப் படிக்க வேண்டும். நூற்றுக்குப் பத்து பேர் அதைப் புரிந்து கொண்டால் பெரிது."

அன்புடன்,

மா சிவகுமார்

ஓகை said...

இரியோ, மிகவும் தவறான புரிதல்களைக் கொண்டிருக்கும் பதிவு.
(வேண்டுமென்றேதான் இரியோ என்று அழைத்தேன்)

மாசி, அருமையான விளக்கம். நன்றி.

//RAM-ஐ விட "நினைவகத்தில்" புரிதல் குறைவுதான் என்பது என் கருத்து.//

உண்மைதான். ரேம் சொல்லுவதை நினைவகம் சொல்லவில்லை. பேருந்து சொல்வதை பஸ் சொல்லவில்லை என்பதைப் போல. ஆங்கிலேயர்களை இனிமேல் பேருந்து என்றே சொல்லுங்கள் என்று சொல்லிவிடலாமா?
"Hey Rio, there comes my paerunthu!"

ரேமுக்கு ஒரு நல்ல தமிழ்ப்பதம் சீக்கிரமே வழக்கத்திற்கு வரும். நம்புங்கள். உடனடியாக நான் செய்து உங்களுக்குத் தரும் சொல் 'வைத்து எடுக்கும் நினைவகம்'. இதை முதலெழுத்துக்கூட்டாக (abbreviation)
வை எ நி அல்லது வையெநி என்று அழைக்கலாம். இன்னொன்று பமநி (படிக்க மட்டும் நினைவகம்.)

இவை உங்களுக்கு விளக்குவதற்காக நான் இப்போது செய்த சொற்கள். அறிஞர்கள் இன்னும் அழகிய சொற்களை ஆக்குவார்கள். அதுவரை இதையே கூட பயன்படுத்தலாம்.

//தமிழில் அப்ரிவியேஷன் டெக்னிக் ஒர்க் அவுட் ஆகுமா?//

அதாவது தமிழில் முதலெழுத்துக்கூட்டு வேலைக்காகுமா என்று சுந்தரத் தமிழில் கேட்கிறீர்கள். அப்படித்தானே!
ஆகும். ஆங்கிலத்தையும் விட அழகாக அது சில நேரங்களில் அமைந்துவிடும். வையெநியும் பமநியும் எடுத்துக்காட்டுகள்.

Frequently asked question - FAQ
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - அக்கேக்கே.

//உச்சரிக்க
ரயில் - 3 மாத்திரைகள்
தொடர் வண்டி - 4 மாத்திரைகள் கால அளவு எடுத்துக்கொள்ளும். எளிய சொற்களையே பெரும்பாலோனோர் விரும்புவார்கள்.//

umbrellaa -குடை, fly - ஈ, இவற்றுக்கெல்லாம் மாத்திரை கணக்கு போட்டுப் பாருங்கள்.

//ஒரே செயலையோ பொருளையோ குறிக்க ஆங்கிலத்தில் ஏகப்பட்ட சொற்கள் உண்டு. தமிழில் ஒரே சொல்லில் ஏகப்பட்ட பொருள் கொள்கிறோம்//

ஒருவன் குடிபோதையில் இருப்பதை விவரிப்பதற்கு ஆங்கிலத்தில் 64 சொற்கள் இருப்பதாக படித்திருக்கிறேன். தமிழில் அவ்வளவு இல்லை என்றே நினைக்கிறேன்.

படகு என்னும் பொருளைத் தரும் சொற்கள் தமிழில் 50 க்கு மேல் இருக்கின்றன. அவ்வளவுக்கு ஆங்கிலத்தில் இல்லை என்றே நினைக்கிறேன்.

நீங்கள் குறிப்பிடும் இந்த மொழிப்பண்பில் தமிழ் ஆங்கிலத்தை விட பன்மடங்கு சிறந்த மொழி.

win win situation என்பதை நான் தமிழ்ப்படுத்தும்போது 'வெல்வெல் சூழல்' என மிக அழகாக அமைந்தது.

//இலக்கணம் யாப்பு அது இதுவென்று வாக்கியங்கள் அமைக்க ஏகப்பட்ட கட்டுப்பாடு. //

நீங்கள் அறியாமையிலும் ஒரு வகை மொழிவன்மத்திலும் உழல்கிறீர்கள். இந்தக் கேள்வியை c++ ல் கேட்க முடியுமா? நிகழ்கால பன்மையில்லா படர்க்கை வினையில் (உங்கள் மொழியில் - third person singuler present tense verb) ஏன் s சேர்க்க வேண்டும். put ஐ புட்டென்னும் நீங்கள் cut ஐ ஏன் குட்டென்று சொல்வதில்லை? இது போன்ற கேள்விகள் எண்ணற்றவை.

//அண்டைய சமூகத்தாரின் பெயரைக்கூட தமிழில் எழுத முடியாவிட்டால் அது பெருமையா, தமிழில் குறையா?//

அறிவழகனையும் கிள்ளிவளவனையும் ஆங்கிலத்தில் அழகாக எழுதிவிட்டு அப்பறம் இந்தக் கேள்வியைக் கேளுங்கள்.

மொழிகளின் தனித்தன்மைகளைக் கொச்சைப் படுத்தாதீர்கள்.

தமிழ் தொழில்நுட்பத்திற்கான மொழியா?

இதற்கு தமிழை விட சிறந்த மொழி இருக்க முடியுமா?

ரியோ said...

சில வருடங்களுக்குப்பின், இப்போது இப்பதிவைப் படிக்கும்போது, மா சிவகுமார் மற்றும் ஓகையின் கருத்துக்களோடு முழுவதும் ஒத்துப்போகிறேன். மொழியைப்பற்றிய புரிதல் அதிகமாகியிருப்பதுதான் காரணம். :)